🍉🍉🍉 வைபோகம் தரும் வைகாசி விசாக விரதம் 🍓🍓🍓


‘‘வைகாசி மாசத்ல வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்யும். இந்த மாசம் அக்னி நட்சத்திரம் வேறே வரும். கேட்கணுமா?’’ மாமி ஆரம்பித்தாள். ‘‘ஆனா இந்த வெயில் காலத்துலதான், முருகப் பெருமான் 

உஷ்ணாவதாரம் செய்தார்...’’
  ‘‘அட, இந்த மாத ஸ்பெஷல் முருக அவதாரம் பற்றியா?’’ கிருத்திகா சூசகமாய் கேட்டாள்.
  ‘‘ஆமாம், இந்த மாசம் அதாவது வைகாசி மாசம், விசாக நட்சத்திரத்திலேதான் முருகன் அவதாரம் பண்ணினார்.’’
  ‘‘இந்த அவதாரத்தோட நோக்கம் என்ன மாமி?’’ தீபா கேட்டாள்.
  ‘‘வேற என்ன, அசுரவதம்தான்’’ கிருத்திகா சொன்னாள்.

  ‘‘கரெக்ட்’’ பவானி மாமி கிருத்திகாவை ஆமோதித்தாள். ‘‘அசுரர்களோட தொல்லை தாங்க முடியாம தேவர்களும் முனிவர்களும் மக்களும் ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க. துஷ்டனுக்குப் பதவியும் பராக்ரமும் வந்திட்டா கேட்கவா வேணும்? ‘கள்ளைக் குடிச்ச குரங்கைத் தேளும் கொட்டிச்சாம்’ அப்படீம்பாங்களே, அதுமாதிரி அரக்கர்களெல்லாம் அநியாயம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சமும் தயங்காம கடுமையா தவம் இருந்து தேவையான வரமும் வாங்கிட்டதாலே, ரொம்பவும் அகம்பாவம் பிடிச்சு கண்ணிலே படற எல்லோரையும் கலங்க அடிச்சுகிட்டிருந்தாங்க. அந்த அசுரர்களை அடக்க, தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிற மனிதர்களுக்கும் நிம்மதியைத் தர, ஒரு அவதாரம் வேண்டியிருந்தது. அதுதான் முருகன் அவதாரம். அவதாரம்னா ‘வானிலிருந்து இறங்கி வருதல்’னு அர்த்தம். அப்படி ஒரு தெய்வசக்திதான் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று எல்லோரும் சிவபெருமானிடம் முறையிட்டு, வேண்டி அழுதாங்க...’’
  ‘‘ஆனா அவர்தானே அசுரர்களுக்கு வரமும் கொடுக்கிறார்?’’ தீபா கேட்டாள்.

  ‘‘உண்மைதான். யாருக்கு வரம் கொடுக்கிறாரோ அவனோட அழிவையும் அவர் தீர்மானிச்சுகிட்டுதானே கொடுக்கிறார்!’’ புவனேஸ்வரி மாமிக்கு ஆதரவாகப் பேசினாள்.
  ‘‘அவ கேட்டதும் சரிதான்; அதுக்கு நீங்க சொன்ன பதிலும் சரிதான்....’’ மாமி பொதுவாகச் சொன்னாள். 
  ‘‘சரி மாமி, முருகன் எப்படி அவதரிச்சார்?’’ தீபா கதையில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தாள். 


‘‘எல்லோரும் சிவபெருமானை வேண்டிகிட்டாங்களா? அவர் மனசுக்குள்ளேயும் கோபம் பொங்கியது. அதோடு, அப்போது புதிய அவதாரம் ஒன்றைப் படைக்க வேண்டிய அவசியமும் வந்தது. இந்த அவதாரம், ஏற்கனவே இருக்கிற அல்லது புதிதாக முளைக்கக்கூடிய அரக்கர்களை அழிச்சு, இனி வருங்காலத்திலேயும் அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பை மேற்கொள்ளணும்னும் அவர் தீர்மானிச்சார். குறிப்பாக அப்போது உலகையே துவம்சம் செய்து கொண்டிருந்த சூரனை சம்ஹாரம் செய்யறதுக்காக ஒரு அவதாரம் அவசியம் தேவைப்பட்டது. அப்போதைய பிரச்னையைத் தீர்ப்பதென்றால் குறைந்த அளவு சக்தியுடன் அந்த அவதாரத்தை ஏற்படுத்தினா போதும். ஆனா கலியுக மக்களோட துன்பங்களையெல்லாம் போக்கக்கூடிய அவதாரம்னா அது ரொம்பவும் சக்தி வாய்ந்ததாக இருக்கணும் இல்லையா, அதனாலே தன்னோட இயல்பான இரண்டு கண்களையும் மூடிக் கொண்டார். அதே சமயம் நெற்றிக் கண்ணைத் திறந்தார்.’’

  ‘‘ஐயோ! நெற்றிக்கண்ணை சிவபெருமான் திறந்தாரா? அவ்ளோதான். எதிர்லே இருக்கக்கூடிய எல்லாமும் பஸ்பம்தான்.’’ பயந்தபடி சிலிர்த்துக் கொண்டாள் தீபா.

  ‘‘ரொம்பவும் பராக்கிரமசாலியான அவதாரம் சிருஷ்டிக்கப்படணுமில்லியா? அதனாலதான். முக்கண்ணன் தன்னோட மூணாவது கன்ணைத் திறந்தாரா, அதிலேர்ந்து ஆறு துளிகள், அதாவது ஆறு தீப்பொறிகள் தெறித்து விழுந்தன. ஈசனோட கொதிக்கும் மனசோட பிரதிபலிப்பு இல்லையா, அதனால அந்த ஆறு பொறிகளும் கடுமையான வெப்பத்தோட தகிச்சுது. அந்த ஆறு பொறிகளும் தகிச்ச தகிப்பை அங்கே இருந்த யாராலுமே தாங்கிக்கொள்ள முடியலே. அதைப் பார்த்து அவங்கள்லாம் பயந்தாலும் மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டாங்க. அப்பாடா, அரக்கர் தொல்லை இனிமே இல்லைன்னு அப்பவே நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பிச்சாங்க. ஆனா, அந்த ஆறு பொறிகளையும் யார் தாங்கறது? அந்த சூடு அப்படியே தொடுவோரை சாம்பலாக்கி விடாதா?’’
  ‘‘அதானே!’’ புவனேஸ்வரி வியந்தாள்.

  ‘‘இவர்களுக்கு உதவறதுக்காக அக்னி பகவானே முன் வந்தார். தானே அக்னியாக இருக்கறதாலே அந்த ஆறு பொறிகளையும் தான் தாங்கிக் கொண்டு, இறைவன் கட்டளைப்படி அடுத்து செய்ய வேண்டியதைச் செய்யலாம்னு அவர் நினைச்சார். அப்படி நினைச்சு அவற்றைத் தாங்கிய அவராலேயே அந்த வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை!’’
  ‘‘அட! இது என்ன வேடிக்கை! அக்னி பகவானாலேயே அந்த சூட்டைத் தாங்கிக்க முடியலியா?’’ தீபா பிரமித்தாள்.   ‘‘ஆமாம், அந்த சூடு பொறுக்க முடியாமல், அவர் நேராக அந்தப் பொறிகளைத் தூக்கிக் கொண்டு சரவணப் பொய்கையிலே விட்டார். ரொம்பவும் குளிர்ச்சியான அந்தப் பொய்கை, அந்த ஆறு பொறிகளையுமே அப்படியே உள்வாங்கி அணைச்சுண்டது. தாய்மை உணர்வு பொங்க அப்படி அந்தப் பொறிகளை ஏத்துண்ட அந்தப் பொய்கை, அந்த ஆறு பொறிகளையுமே ஆறு அழகான குழந்தைகளாக மாற்றிக் கொடுத்தது.’’  ‘‘அற்புதம்!’’ வியந்தாள் புவனேஸ்வரி.

  ‘
வாஸ்தவம்தான். இப்படி ஆறுமுகன் உதிச்ச நாள்தான் வைகாசி விசாகம் நட்சத்திரத் திருநாள்.’’
  ‘‘முருகன்னாலே அழகும்பாங்க, இல்லையா மாமி!’’ கிருத்திகா கேட்டாள். 
  ‘‘ஆமாம், மதுரைக் கலம்பகம்ற பாடல்ல முருகன்னா இளமைன்னு வர்ணிச்சிருக்காரு, ‘அருங்கடி வேலன் முருகொடு வளைகு..’ன்னு ஒரு வரி அதிலே வரும். பட்டினப்பாலை, முருகன்னா ‘மணம்’னு சொல்லுது...‘முருகம்பூ முரண் கிடக்கை..’; புற நானூறில் ‘தெய்வம்’ங்கற அர்த்தத்திலே சொல்லப்படுது. அதாவது முருகன் அருள் வந்து பக்தர்கள் சில பேர் உணர்வறியாம ஆடறாங்களே, அந்தத் தெய்வத்தன்மையை ‘வெறியாட்டு’ன்னு வர்ணிக்கிறது. ‘முருகு மெய்ப்பட்ட புலத்திபோல’ முருகன்னா ‘தேன்’ அப்படீன்னு நைடதம் சொல்லுது. ‘முருகு வாய் மருந்துண்டனி மூசும...’’
‘‘அட...! மாமி பக்தி இலக்கியத்திலேயும் மாஸ்டர்தான்போல!’’ வியந்தனர், கிருத்திகாவும் தீபாவும்.

  ‘‘முருகனைப் போற்றிப் புகழக்கூடிய பாடல்கள் ஏராளமா இருக்கு. வடமொழி புலவன் காளிதாசனும் முருகன் அவதாரத்தை அழகாக, ‘‘குமார சம்பவம்’’னு சொல்றார்.
  ‘‘குமாரன்னா, இளைஞன்னுதானே அர்த்தம்?’’ புவனேஸ்வரி கேட்டாள்.

‘‘ஆமாம். குமரன் என்னிக்கும் இளைஞன்தான். அவனை நாடி சரணடைஞ்சவங்களுக்கு என்னிக்கும் ஆதரவானவன்தான். கந்த புராணத்திலே என்ன சொல்றது தெரியுமா? ‘உருதிரு முருகன் வந்து உதித்தனன் ஆங்கு உலகம் உய்ய’ னு சொல்லியிருக்கு. அதாவது சூரியன் போலவாம் இந்த அவதாரம். அதாவது, சூரியன் பர்மனென்டா இருக்கற ஒரு சக்தி இல்லையா? நம்முடைய பூமி சுழற்சியிலே நமக்கு பகல் போய் இரவு வருது. ஆனா அதே சமயம், உலகத்தின் மறு பக்கத்திலே இருக்கறவங்களுக்கு அது பகல்தானே? அதுமாதிரி முருகன் என்ற சக்தியும் நிரந்தரமானதுதாங்கறது பெரியவங்க தர்ற விளக்கம். முருகன் நிரந்தரமானவர், தீவினையை அழிக்க உதித்தவர். இருட்டில் மூழ்கிக் கிடக்கறவங்களுக்கு வெளிச்சமாய் வந்து தெளிவைத் தர்றவர்...’’

‘‘அப்படின்னா, முருகனுக்கு விசேஷமான இந்த வைகாசி விசாகத்தன்னிக்கு முருகன் கோயில்ல எல்லாம் விசேஷமா வழிபாடெல்லாம் இருக்கும், இல்லே மாமி?’’ புவனேஸ்வரி கேட்டாள்.

‘‘நிச்சயமாக, ஸ்ரீலங்காவிலே கதிர்காமத்திலே ஆறுமுகசாமி புறப்பாடுன்னே இந்த வைகாசி விசாக நாள்ல, ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை மயிலாப்பூர்ல, கபாலீஸ்வரர் கோயில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோயில்ல இந்த நாள்ல சுவாமி புறப்பாடு நடக்கும். அந்த ஊர்வலத்தின்போது, சுவாமிக்கு இருபுறமும் நாதஸ்வரம் வாசிச்சுக்கிட்டுப் போவாங்க. வழக்கமா இதுமாதிரி ஊர்வலத்திலே சுவாமிக்கு முன்னாலதானே நாதஸ்வரம் வாசிச்சுக்கிட்டுப் போவாங்க; ஆனா ஆறுமுகக் கடவுளின் ஆறுமுகங்களுக்கும் மரியாதை செய்யும் வகையில் இந்த மாதிரி இரு பக்க நாயன வாத்திய இசையை முழக்கிக்கிட்டே போவாங்க. திருச்செந்தூரில் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே அபிஷேகம் நடக்கும். சுவாமிமலை, பழனி ஆகிய பாலமுருகன் தலங்கள்லே, பால்குடம் எடுக்கறது, பால் காவடி எடுக்கறதுன்னு விழாக்கள் அமர்க்களப்படும்...’’ ‘‘சரி மாமி, இதிலே விரதம்னு என்ன பண்ணனும்?’’ கிருத்திகா கேட்டாள்.

‘‘ரொம்ப சிம்பிள். அதுக்கு முன்னால இந்த வருஷம், வைகாசி விசாகம் என்னிக்கு வருதுன்னு பார்க்கலாம். இந்த மாசம் 2ம் தேதி, பகல் 2.41 முதல் மறுநாள், 3ம் தேதி பகல் 1 மணிவரை விசாக நட்சத்திரம்னு பஞ்சாங்கம் சொல்றது. 2ம்தேதி நட்சத்திரம் பிரதானமாக இருக்கற இடங்கள்லேயும் 3ம் தேதி பௌர்ணமி பிரதானமா இருக்கற இடங்கள்லேயும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். பொதுவாகவே வைகாசி விசாகம், பிரதோஷ நாள்லதான் வரும். 2ம் தேதி பிரதோஷம், அதுவும் சனிப் பிரதோஷம்! 2ம் தேதி மதியத்துக்கு மேல விசாகம் வர்றதால, 3ம் தேதி விரதத்தை மேற்கொள்ளலாம். காலையிலே வழக்கம்போல தூங்கி எழுந்து, குளிச்சிட்டு, முருகன் பாடல்களைப் பாடியோ, முருகன் ஸ்தோத்திரங்களை ஜபித்துக்கிட்டோ இருக்கணும். அன்றையப் பொழுது முழுவதும் நீராகாரம் அல்லது பால் மட்டும் குடிக்கறதுன்னு வெச்சிக்கணும். ஸ்பெஷலாக நிவேதனத்துக்காகத் தனியாக எதையும் தயாரிக்க வேண்டாம். ஆனா, முருகனுக்குப் பால் நிவேதனம் பண்ணலாம். அன்னிக்கு முருகன் பிறந்த நாள் இல்லையா, கார்த்திகைப் பெண்கள் முருகனுக்குப் பால் புகட்டி அவனுடைய வீரத்தையும் பராக்கிரமத்தையும் விளங்கச் செய்தாங்க இல்லையா, அதைக் குறிக்கறா மாதிரி முருகனுக்குப் பால் நைவேத்யம் செய்யலாம். அன்றைக்குக் கோயிலுக்குப் போய் முருகன் பால் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரலாம். ஏதேனும் வேண்டுதல் இருந்தால் பால்குடம் சுமந்து போய் அருகிலுள்ள முருகன் கோயிலில் சேர்க்கலாம். பால் காவடி எடுப்பதாக வேண்டுதல் இருந்தாலும் அதையும் இந்த வைகாசி விசாக நாள்லயே நிறைவேத்தறது ரொம்பவும் விசேஷம்....


அன்றைய உபவாசம் முடிஞ்சு, ராத்திரியிலே இட்லி மாதிரியான, இலகுவான ஆகாரத்தைக் குறைவாக சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். எல்லாத்தையும் விட, அன்னிக்குப் பூராவும் கந்த சஷ்டி கவசம், ஷண்முகக் கவசம், கந்தர் அநுபூதி, சுப்ரமண்யர் ஸ்தோத்திரம், ஆதி சங்கரர் இயற்றிய சுப்ரமண்ய புஜங்கம், முருகன் பாடல்கள்னு முழுக்க முழுக்க முருகன் நினைவோடேயே, பிரார்த்தனையோடவே இருந்தா, பால் பொங்குவது போல மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும். வாழ்க்கையிலே எல்லா வளங்களும் சேரும். எதிரிகள்லாம், காணாமப் போயிடுவாங்க. முக்கியமா மனசில் நிம்மதி சேரும்.’’ மாமி சொல்லி முடித்தாள்.


Comments

Popular posts from this blog