🌷🌷🌷ஸ்ரீசனீஸ்வர பகவான் மகிமை🌷🌷🌷

நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும். 











வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது ?


ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி

தந்நோ மந்த ப்ரசோதயாத்


என்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.


பிரகதீஸ்வரர்


சனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.


அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும்? அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.


மற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம்? அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான். 


அதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.



Comments

Popular posts from this blog